Saturday 30 March 2013

திருவிழா...!!!





நீ
என்
பின்னால் வருகையில்
நான் உன்னை
திரும்பி பார்த்தால்
நீ
என்னை திட்டுவாய்
என்பது தெரிந்தும்
திரும்ப திரும்ப
திரும்பி திரும்பி
உன்னை பார்ப்பேன்
நான்
திரும்பியவுடன்
நீ
என்னை
திட்டிவிட்டு
திருட்டுத்தனமாக
சிரிப்பது
திருவிழாவாக
இருக்கும் எனக்கு...!!!

                                  - இளையபாரதி
 

கொஞ்சல்


நீ, 
என்னை 
கொஞ்சிக்கொண்டிருந்தபோது,
என் உயிர் 
என்னிடம் 
கெஞ்சிக்கொண்டிருந்தது,
இவளுக்காக
என்னை
விட்டு விடுவாயா
என்று...???

           

                    - இளையபாரதி

அடிக்கடி




" ஏன்டா இப்படி பன்ற...?"..,என்ற
உன்
செல்ல கெஞ்சலை
அடிக்கடி கேட்கவே.,
அடிக்கடி
அப்படியெல்லாம்
செய்தேன் நான்...!!!

                            - இளையபாரதி

என்று தணியும்..?


Thursday 21 March 2013


நீ...
முத்தமிட்ட
மறு நொடியே 
அந்த குழந்தையின் 
கண்ணங்களை
நான்....
முத்தமிட்டேன்...
ஒரு குழப்பம்
குழந்தையின்
கண்ணங்கள் இனிப்பா..?
உன் எச்சில்
" இனிப்பா "...???

- இளையபாரதி

Thursday 7 March 2013

ஆன்ராய்டு அலைபேசியில் என் கவிதை தொகுப்பு.....

Get this cool Android App

பேடிகள் நாங்கள்...!!!



பேடிகள் நாங்கள்..!

ஈழம் வாழும் சொந்தங்களே..,
கொன்று குவியுங்கள் எங்களை..
பேடி நாங்கள்..!

அயல் நாட்டவன் ஒருவன்
வெளிக்கொணரும்,
ஆவணப்படம் பார்த்தால்தான்..
உங்கள் வலி
உணரக்கூடும் எங்களால்...
ஆம் பேடிகள் நாங்கள்...!

ஆயுதம் கொடுத்து
உங்களை கொலை செய்த
ஒரு கொலைகார நாட்டில்
இன்னும் வாழ்கிறோம்
ஆம் பேடிகள் நாங்கள்...!

கேடிகளை அரசாளவிட்டு
கோடிகளில் அவர்களை புரளவிட்டு,
பிச்சை கேட்க்கும்
பேடிகள் நாங்கள்..!!

உயிர் படகு ஏறி
உயிர் வாழ
மீன்பிடிக்க செல்லும்
மீனவ அண்ணனே...!
சுட்டு கடலில் வீசு எங்களை..
நீ சுடப்பட்ட நேரத்தில்
ஒரு திரை படத்திற்காக
வீதியில் இறங்கி போராடினோம்..
போராளி பேடிகள் நாங்கள்...!

வாழ்க்கைக்காக போராடும்
இடிந்தகரை உறவுகளே..
அணுஉலை கசிந்தால் என்ன..??
மக்கள் குருதி கசிந்தால் என்ன..??
காதல் கசிந்தால் போதும்
எங்களுக்கு..!
மின்சாரம் வந்தால் போதும்
எங்களுக்கு..!
இப்படிதான் சிந்திப்போம்
ஏன் என்று கேட்காதீர்கள்..
பேடிகள் நாங்கள்..!

மரண தண்டனை
விதிக்கப்பட்டு..
ஒவ்வொரு நாளும்
மரணத்தை வெல்லும்..
மும்மூர்த்தி சகோதரர்களே..
இந்தியா கிரிக்கெட்டில்
தோற்றதனால்..சோகத்தில்
உங்களுக்காக,,..
வாய்திறக்க முடியவில்லை எங்களால்..,
உங்களுக்கு தெரியாதா என்ன.?
பேடிகள் நாங்கள்..!

வீரதிருமகனின் வீர மகனே,
இனிப்புண்டு,
துப்பாக்கி குண்டுகளை.,
நெஞ்சம் நிமிர்த்தி,.
நீ சாய்ந்தபோது..
காதலர் தின கொண்டாட்டங்களில்
இருந்துவிட்டோம்..
பேடிகள் நாங்கள்...!!

இந்தியனாக இருக்கும்வரை
பேடிகள்தான் நாங்கள்..
ஆம் பேடிகள்தான் நாங்கள்
பேடித்தனம் விட்டு...மனிதனாவோம்
இன்று முதல்
இந்தியன் அல்ல நான் "தமிழன்"
தமிழனாவோம்..
"தலை நிமிரட்டும் தமிழன்"...!!!

- இளையபாரதி 

Monday 4 March 2013

" கல்கி " வார இதழிலில் (27.05.2012) வெளியான எனது கவிதை...!!!


இந்த வார " கல்கி " வார இதழிலில் (27.05.2012) வெளியான எனது கவிதை...!!!
இதை "கல்கி"கு அனுப்பி வைத்த அக்கா மௌலா தேவி அவர்களுக்கு என் நெஞ்சினிக்கும் நன்றிகள் கோடி..!!!

பாரதிக்கு ஒரு கடிதம்..!!!



பாரதிக்கு ஒரு கடிதம்..!!!

நான் விட்டுப்போன 
வேலைகள் பல 
கிடப்பில் கிடக்க 
எனக்கு ஏன் கடிதம்
எழுதுகிறான் இந்த
பித்தன் என்று கோபப்படாதே
மகா கவியே..!

சில சந்தேகங்கள் கேட்டு
சில யோசனை கேட்டு
சில முடிவு கேட்டு..
எழுதுகிறேன் இக்கடிதம்
தீர்க்க முடிந்தவன்
நீ மட்டுமே..!!
தீர்ப்பு தெரிந்தவனும்
நீ மட்டுமே...!!

தனியொரு மனிதனுக்கு
உணவில்லை எனில்
இந்த ஜெகத்தினை
அழித்திடுவோம் என்றாய்..!
தமிழனுக்கு தண்ணீர்
தர மறுத்தால்
நாங்கள் என்ன செய்ய...??

வரப்போகும் தலைமுறையை
ஊனமாக்கிவிட்டு...
என் பேதை மக்களுக்கு
மின்சார ஆசை காட்டும்
முட்டாள் மந்திரிகளை
என்ன செய்ய..??

சிங்கள தீவிற்க்கொரு
பாலம் அமைப்போம் என்றாய்
நம் இனம் அழிக்கப்பட்டு
பசியாறினான் சிங்களன் ..
சிங்கள தீவிற்கு
பாலம் கட்டலாமா...??
பாசம் காட்டலாமா..??
பாடை கட்டலாமா..??
என்ன செய்ய நாங்கள்..???

ரௌத்திரம் பழகு என்றாய்
கோத்திரம் பழகுகிறார்கள்
சில மக்கள்
என்ன செய்ய நாங்கள்..??

சாதிகள் இல்லையென்றாய்
சாதி இல்லையென்றால்
பாதி நாடு இருக்காது இங்கு..!!

காமராசர்,
முத்துராமலிங்கர்
அம்பேத்கர்
போன்ற மா மனிதர்களையும்
சாதிவாரியாக பார்க்கும்
குப்பை சமூகமாகத்தான்
இருக்கிறது இன்னும்,
என்ன செய்ய நாங்கள்...!

சாதிக்க வேண்டிய
மாணவர்கள் இன்று
சண்டியராக நினைக்கிறார்கள்
நாங்க என்ன செய்ய..??

வாக்கு கொடுத்துவிட்டு
போக்குமாறி போகும்
போலி மனிதர்களை
அதான் அரசியல் வியாதிகளை
என்ன செய்ய..?

தீர்த்தக் கரையினில்
கண்ணம்மாவிற்காக
காத்திருந்தாய் நீ..
இன்று இடிந்தகரையில்
விடியலுக்கு காத்திருக்கும்
இடிந்துபோன இதயங்களுக்கு
என்ன சேதி சொல்ல நாங்கள்..??

உண்மைக்காக உயிர்விட
துணிந்தாய் நீ..!
ஊழலுக்காக உண்மையை
விற்கும்
உத்தம அரசியல்வாதிகளை
என்ன செய்ய நாங்கள்..?

நேர்பட பேசு என்றாய்
நேர்பட பேசினால்
இந்திய
இறையாண்மைக்கு பங்கமாம்
என்ன செய்ய நாங்கள்..???

அச்சமில்லை என்றாய்
எதுவும் எங்களுக்கு
மிச்சமில்லாமல்
சுரண்டிக்கொண்டு போகிறார்கள்..
என்ன செய்ய வேண்டும் நாங்கள்..!

ஒரு காலம் கடந்த
வேண்டுகோள் உன்னிடம்
கவிதையை கையில்
எடுத்த நீ
அரசியலை கையில்
எடுத்திருந்தால்
எங்களுக்கு இந்த நிலை
வந்திருக்காது...!!

இரண்டு வழி
உண்டு தலைவா
ஒன்று
அங்கிருந்து வழிநடத்து
அல்லது
மீண்டும் பிறந்து வா...

இங்கு பாரதி பித்தர்கள்
ஏராளம்
நாம் நல்லதொரு
அரசியல் படைப்போம்...!!!

விரைவில்
" புரட்சி" வெடிப்பது மட்டும்
சத்தியம்...!!!

- இளையபாரதி

" கவிதை நாள் "



எம் தலைவன் பிறந்த நாள்..!!!

உனக்கு கவி 
எழுதும் தகுதி 
எனக்கு இல்லை தலைவா..
ஆனால்
உனக்கு கவி
எழுதும் கடமை
எனக்கு இருக்கிறது....!

நீ பிறப்பெடுத்த
இந்நாள்...
இந்திய நன்னாள்....
தமிழ் புதுபிறப்பு எடுத்த நாள்....!
130 வது பிறந்தநாள்
உனக்கு...!

இன்று நீ இருந்திருந்தால்
என்ன செய்திருப்பாய்
தலைவா..??
நீ செய்ய
நினைத்தவைகளை
நான் செய்கிறேன்...

கண்களிருந்தும்
குருடாகி கிடக்கும்...
செவிடர்களிடம்...
எத்தனை முறை
உன் கவிகள் பேச...??

நீ அன்று பார்த்த
" நடிப்பு சுதேசி"களின்
பேரன் பேத்திகள்...
அதிகம் உள்ளனர் நாட்டில்...
இன்று நீ இருந்திருந்தால்
இவர்களை
என்ன செய்திருப்பாய்
தலைவா..??
நீ செய்ய
நினைத்தவைகளை
நான் செய்கிறேன்...

காதல் திருமணம்
செய்தால் கலவரம்...
காரணம் கேட்டால் சாதி..!

சாதி பிரிக்கும்
சாணக்கியர்களை...
சத்தமில்லாமல்..
சங்கை கடித்து
துப்பத்தான் போகிறேன் நான்...!
என் பலமாக என்னோடு
இரு தலைவா..!

தமிழ் பேசினால்
தகுதிக்குறைவு என்று
தப்பட்டம் அடிக்கும்
தரம்கெட்ட
தடியர்களை...
தர தர வென
தரையில் போட்டு
தவிடு பொடி ஆக்கப்போகிறேன்...!
என் பலமாக என்னோடு
இரு தலைவா..!

காதல் என்ற பெயரில்...
காம வேடம் பூண்டு
காம களியாட்டம் போடும்
காளையர்கள் மற்றும்
கன்னியர்களின்
கண்களை....
களவாடி வந்து
கசக்கி எரிக்கப்போகிறேன்...!!
என் பலமாக என்னோடு
இரு தலைவா..!

பாரத நாட்டை
கூறு போட்டு
வியாபாரம் நடக்கிறது
தலைவா..!!

பாரத நாட்டை
பாரதி நாடென்று...
பெயர் சூட்டுவோம்...
வெள்ளையன்
ஒருவன் வர மாட்டான்...
வியாபாரம் செய்ய...!

அன்னையர் நாள் இருக்க....
தந்தையார் நாள் இருக்க....
நண்பர்கள் நாள் இருக்க....
காதலர் நாள் இருக்க....
கவிதை நாள் இல்லை...

இவ்வருடம் முதல்
உன் பிறந்தநாள்
" கவிதை நாள் "..என
நாங்கள்
" இனி ஒரு விதி செய்வோம் "...!!!

- இளையபாரதி

அழகாக்கியது....


நீ...
சொன்னதை 
நான்... 
செய்யவில்லை என்று..
நெற்றி சுருக்கி 
உதடு சுழித்து...
நீ...
பார்க்கும்
அந்த..உரிமையான
பார்வைதான்...
அழகாக்கியது...
என்னையும்
நம் காதலையும்...!!!

                 - இளையபாரதி

"உலக நீதி"...!!!


கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்ணின் குமுறல்...

கை கோர்த்து 
கண்கள் சேர்த்து 
காதல் வளர்த்த நமக்கு...
நெஞ்சில் உரம் இல்லாமல்
போனதேனடா காதலா..?

விஷம் காட்டிய பெற்றோருக்காய்
விஷமான வாழ்கை ஏற்றேன்...
நம் காதல் கொன்று...

நம் காதல் நொறுக்கி
கண்கள் ஏறிய
இதயம் பொசிந்து...
என் கணவர் தாலி கட்ட
நான் ஏற்றது
வாழ்கையை அல்ல
வலிகளை...
கட்டியவன் நீ இல்லை
என்பதால்...!

பொசிந்த இதயத்தோடும்
கசிந்த புடவையோடும்தான்...
விடிந்தது
என் முதல் இரவு...!
வழி இல்லை வேறு..!


பிடிக்காத வாழ்க்கையானாலும்
பிடித்துதான் வாழ வேண்டும்
பெற்றோர் செய்து வைத்தால்
இதுதான் நம் நாட்டு
திருமண நீதி..!

பிடித்துவிடும் என்று
பிடி கொடுத்தாலும்
பிடிக்கவே இல்லை...எனக்கு...!
இது காதலின் நீதி...!

என்றும் உன் நினைவு..
எங்கும் உன் நினைவு..
எதிலும் உன் நினைவு...

உன் பெயர் நினைவு படுத்தும்
எதுவும் எனக்கு
உன்னை நினைவு படுத்துவதில்லை...
உன் நினைவு மட்டுமே...
எனக்கு அனைத்துமாய் இருக்கிறது....

பேருந்தில் தொங்கியபடி நீ...!
இருக்கையில் இருந்தே
உன்னை தாங்கியபடி நான்...!

வகுப்பில் என்னை
கவனித்தபடி நீ...!
பாடம் கவனிப்பதை போல்
உன்னை
கவனித்தபடி நான்...!

இப்படியான சுகங்கள்
காதலை தவிர
வேறு எங்கு கிடைக்க கூடும்..!

இன்னமும் நான்
சுவாசிப்பது...நீ
வெளியிடும் சுவாசம்
நான் சுவாசிக்கிறேன் என்ற
நம்பிக்கையில்....!

விஷம் காட்டி
பணிய வைக்கும்
எந்த பெற்றோருக்கும்
தெரிவதில்லை..
புரியப்போவதும் இல்லை...
காதலின் அருமை..!

யாருக்கு தெரியும்
உனக்காக நான்
கவி எழுதும் இந்த நொடி..
காதலிக்காக கடிதம்
எழுதிக்கொண்டிருப்பார்
என் கணவர்...!!!

மொத்தத்தில் யாரும்
யாருக்கும் சொந்தமில்லை...
யாரும் யாருக்கும்
உண்மையாக இல்லை..
இறுதிவரை
நடிக்கத்தான் வேண்டும்
இது "உலக நீதி"...!!!

                    - இளையபாரதி 

"உயிர்" வணக்கம்...!


ஈழ மண்ணில் 
இன்பம் விதைக்க
ஈன்றவளையும் விடுத்து 
இனமே எம் தமிழ் இனமே...
நீ வாழ 
நான் வீழ்கிறேன்...என்று
தன் இனம் சுவாசிக்க
தன் சுவாசம் நிறுத்திய
மாவீரர்களுக்கு....
வீர வணக்கம் மட்டுமா...??
இதோ
என் "உயிர்" வணக்கம்...!

தலைவன் திசை காட்ட
தேசம் தனில் தமிழர்
கொடி பறக்க...
துப்பாக்கி காயத்திற்கு
செங்குருதி மருந்திட்ட..
புலி கூட்டத்திற்கு .
"உயிர்" வணக்கம்...

நயவஞ்சக நரிகளுக்கு
நாட்டை கொடாமல்
நரிகளை நடு நடுங்க செய்த
நாயகர்களுக்கு
" உயிர் " வணக்கம்..!!

தமிழினத்தை உச்சமென்று எண்ணி...
உயிரை துச்சம்மென்று எண்ணி..
தமிழ் ஈழம் மட்டுமே மிச்சம் என்று...
மகிழ்வாய் உயிர் துறந்த...
தமிழ் தெய்வங்களுக்கு...
"உயிர்" வணக்கம்...

தம்பி தங்கைகளை அழைத்து
அவர்கள் உடலில் இருக்கும்
ரத்தத்தை நெருப்பாக மாற்றி...
ஈழ முழக்கமிட்ட
வீர வேங்கை...
எம் தலைவனுக்கு...
" உயிர் " வணக்கம்...

ஒரு அரசையே
ஆட்டிப்படைத்து..
தனி அரசாங்கமே நடத்திய
அன்பு அண்ணன்.
மாவீரன்...
வீரன் என்பதன்
விரிவாக்கம்...
அண்ணன் " பிரபாகரன் "க்கு ....!
"உயிர்" வணக்கம்..!

ஈழ தாகத்திற்கு
நெருப்பை குடித்த...
தமிழர்களுக்கு...
"உயிர்" வணக்கம்...!

புலிகளை அழிக்க
பூனைப்படைகளா..??
பூமியே சிரிக்கும்...!

ஈழ மண்ணில்
சிதறிக்கிடக்கும்..
ஒவ்வொரு
துப்பாக்கி துகள்களும்
சிறுமை கொள்ளும்...
கோழை சுட...
ஒரு வீரனை
கொன்றேனே என்று...!!

வீரன் மார்பில்
சிக்கி கிடக்கும்
ஒவ்வெரு
துப்பாக்கி துகள்களும்
பெருமை பேசும்...
வீரன் மார்பில்
இறந்தேன் என்று...!!

உலகில்...
எந்த ஒரு நாடும்
பேசாத,பேசவே முடியாத
பெருமையை...
என் ஈழ நாடு பேசும்..
அதிகமான வீரர்களை
ஈன்றேன் என்று...!!!

எந்த மொழியும்
பேசாத பெருமையை
எம் "தமிழ்" பேசும்
" ஈழம் "...
என் நாடு என்று...!!!

ஈழ நாடு
துள்ளி குதிக்க...
சிங்கள நாடு
தொடை நடுங்க..
தலைவன் வருவான்
சிங்களன் கருவறுக்க..!!!

தமிழ் கூறும்
ஈழம் ஈன்ற
மாவீரர்களுக்கு
தமிழாய்
" உயிர் " வணக்கம்...!!!

                    - இளையபாரதி

" அம்மா "



" அம்மா "

எப்படி எல்லாம்
என்னை வளர்த்தாய் அம்மா...!!

முதல் கவிதை
நான் எழுதி
முதன் முதலாய்
உனக்கு காண்பிக்க
முத்தாக இருக்கு என்றாய்...

மூக்குசளி ஒழுகும்
உன் மகன் எனக்கு
முந்தாணியில் நீ
துடைத்துவிட்ட....
உன் முந்தாணி வாசம்
என் கை குட்டையில்
இல்லை அம்மா...

மிட்டாய் வாங்க
ரூபாய் கேட்டால்
என்னை அலைகழித்து
மசாலா பெட்டி திறந்து
நீ கொடுத்த
ஒற்றை நாணயத்தின்
வாசமே தனி...அம்மா

மறுநாள் நாணயம்
இடம் மாறி
"டீ" பொடி பெட்டியில்
இடம் பிடித்தது.....
அது வேறு சேதி...

என் பள்ளியில்
மாறு வேடப்போட்டி
நடக்க
பாரதியின் வேடம் போட
அப்பாவின் வேட்டி கட்டி..
அண்ணாவின் கருப்பு
கோட்டை போட்டு விட்டாய்..
முழுமையடையாத
குட்டி பாரதியை..
உன் கண் "மை" கொண்டு
மீசை வரைந்தல்லவா
முழுமையாக்கினாய் நீ...!!!

நடு நிசியில்
வேலை முடித்து
நான் வர
பசிக்குதம்மா என்று
நான் சொல்ல
பசி தாங்க மாட்டான்
பிள்ளை என்று
பதறிப்போய்
மொறு மொறுன்னு
நீ சுட்ட தோசை
ஐயோ ..அம்மா...!!!

அடுத்த வீட்டு பையனோடு
அனுதினமும் நான்
சண்டை போட...
அன்பால் இது
ஆகாதுன்னு
அடுப்படி கரண்டியை
அனலில் வைத்து
அப்படியே எனக்கு
சூடு போட்டாய்...
அழுதது என்னவோ...நான்தான்
ஆனால் எரிந்தது
நீ தான் அம்மா...!!!

நொந்துப்போன உன்னை
பார்த்தது, எனக்கு
நோய் வந்த போது அம்மா...

நோய் நொடி வந்தபோதும்
நொடிப் பொழுதும்
நீ உறங்கவில்லை அம்மா..!

அம்மை போட்டு
நான் கிடக்க
பத்தியம் இருந்த
பத்தினி தாயே...!

உன் மடியில்
என் தலை சாய்த்து
மஞ்சள் கரை படிந்த
உன் கைகளால்
தலை வருடிய
உன் விரல்களை
நான் தேடுறேன் அம்மா...!

ஆத்திகம் நீ பேச
நாத்திகம் நான் பேச..
குட்டி குட்டி
பட்டி மன்றங்கள்..
தீர்ப்பு வழங்கும்
நடுவரும்
நீதானே அம்மா... !!

நீ போடும்
அந்த
எட்டு புள்ளி கோலம்
எத்தனை நேரம்
பார்க்கலாம் அம்மா...!!!

விரல் பிடித்து
அப்பா நடக்க
விடுங்க அவனைன்னு
இடையில் சுமந்து
நடந்த தாயே...!!!

நிலாச்சோறு
உருண்டை உருட்டி..
உருண்டை மேலே
கத்திரிக்காய் பொரியல் வைத்து
சிந்தாம சாப்பிடு
என்று நீ சொல்ல....
சாப்பாடு சிந்தவில்லை
கண்ணீர் அல்லவா
சிந்தினேன் நான்...!!

வெளி நாட்டு
வேலைக்கு நான் செல்ல...
குடும்ப கண்கள்
அத்தனையும்
கலங்கி நிற்க...
" கலங்காதிரு மகனே "என்று
கலங்காத கண்களோடு
என்னை வழி அனுப்பி...
திரும்பி நின்று
உன் கண்ணீர் துடைத்த
உன் முந்தாணி
எனக்கு செய்தி சொன்னதம்மா...!!
உன் தலையணை
இன்னமும் எனக்கு
சொல்கிறதம்மா...!!

- இளையபாரதி
 

நாம் கொண்டாடுவோம் " தீபாவளி "...



எது எப்படி ஆனால் என்ன..??

நாம் கொண்டாடுவோம் 
" தீபாவளி "...

ஓசோனில் ஓட்டை 
விழுந்தால் என்ன
ஒசோனே விழுந்தால்
நமக்கென்ன..?
நாம் கொண்டாடுவோம்
" தீபாவளி "...

வெடி குண்டு வைத்து
இனம் அழிக்கப்பட்டால்
நமக்கென்ன...?
நாம் வெடி வெடித்து
கொண்டாடுவோம்
" தீபாவளி "...!!

சிவகாசி சிறுவர்களுக்கு
பாஸ்பரஸ் ஆடை உடுத்திவிட்டு
பட்டாடை உடுத்தி
நாம் கொண்டாடுவோம்
" தீபாவளி "...

இந்தியாவை வல்லரசாக்க்கிவிட்ட
நாம் இனிப்புண்டு...
நாம் கொண்டாடுவோம்
" தீபாவளி "...

இடிந்தகரை இல்லங்களின்
தீபங்கள் அணைந்து கிடக்க
இனிய தீபம் ஏற்றி
நாம் கொண்டாடுவோம்
" தீபாவளி "...!

பல ஆண்டிற்கு முன்
அரக்கன் ஒருவன்
கொல்லப்பட்டதற்கு..
தலைமுறை கடந்து.....
வெடியை வெடித்து
சுற்று சூழலை...கொன்று கொண்டே
வரப்போகும் தலைமுறைக்கு...
சவப்பெட்டி
செய்து கொண்டிருக்கும்
நாம் கொண்டாடுவோம்
" தீபாவளி "...!!

அட என்ன வெட்டி பேச்சு
வாருங்கள்
நாம் கொண்டாடுவோம்
" தீபாவளி "...!

- இளையபாரதி