Thursday 28 May 2015

புத்தனோடு ஓர் உரையாடல்..!


புத்தனோடு ஓர் உரையாடல்..!

கண்களை திற
உன்னிடம் பேசவேண்டும்..
"எதுவாயினும் சொல்
காது கேட்கும் எனக்கு"..
உன் காதுகள் செவிடென்று
நாங்கள் அறிவோம்,
குறிப்பாக நாங்கள்
தமிழர்கள் நன்கு அறிவோம்,..
“செவிடா நானா.? நான் செவிடல்ல,
எனக்கு வலது காது கேட்கும்”
இடக்காது..???
“கேட்காது”..!
சரிதான் ஈழப்போரின்போது
இலங்கையில் இடக்காதைதான் வைத்திருந்தாயோ..?
“வந்த நோக்கம் என்ன.”?
உன் நோக்கம் என்னவென்பதை
தெரிந்துகொள்ள வந்திருக்கிறேன்.,
“உலகில் அமைதி நிலவ வேண்டும்,
அதுவே என் நோக்கம்”,
எப்படி,..? காவி உடையுடுத்தி,
மண்டை மயிரை மழித்து,
சாதுவென்ற பெயரில்
திரிபவரைத் தவிர,மற்ற
மக்களை கொன்று...மயான அமைதி
நிலவ வேண்டும் அதுதானே..!!
அதுதானே உன் நோக்கம்..??
கண்களை திற, நீ குருடனா
என்பதை நான் அறியவேண்டும்,
“அகிமசையை,அமைதியை விரும்பும்
என்னிடம் நீ பேசும் விதம் சரியல்ல..”
அகிம்சையை,அமைதியை விரும்பும்
உனக்கு மனிதக் குருதி எப்படி
பிடித்துப்போனது..??
ஈழத்தில் ருசி கண்ட பூனையாகிப்போய்
பர்மா சென்றிருக்கிறாயா கௌதமா..?
நீ விரும்பியபடி அமைதிதான்
நிலவுகிறது,ஆனால் மயான அமைதி,..!
“நீ சொல்வது விளங்கவில்லை”..
கண்களை திறந்து தொலைக்க மாட்டாய்,
இடக்காதும் செவிடென்றாய்,
உன் மூக்கு சுவாசிப்பதில் ஏதும் பிரச்சனையா..??
“பர்மா” சென்று சுவாசி,
பிணங்கள் எரியும் வாடை வரும்,
இல்லையேல் உன் வலது காதை
பர்மா உள்ள திசையில் திருப்பு,
மரண ஓலங்கள் கேட்கும்..
இத்தனை பேசியும்
கடைசிவரை கண்கள் திறக்கவில்லை
அந்த “புத்தர் சிலை”.
-    இளையபாரதி