Sunday 21 January 2018

பெண்மை

என் மூச்சு
அந்தப் பெண்ணிடம்
நான் பெற்ற கடன்,
அவள் என் அம்மா,

என் மூச்சு
அந்தப் பெண்ணிற்கு
நான் பகிரும் கடன்
அவள் என் மனைவி,

அவள் மூச்சு
அந்த பெண்ணிற்கு
அவள் கொடுத்த கடன்
இவள் என் மகள்,

இவள் மூச்சு
அந்த பெண்ணிற்க்கு
அவள் கொடுக்கும் கடன்
அவள் என் பெயர்த்தி..

பெண் கொடுத்த
கடன் மூச்சு,
பெருகி இந்த உலகமாச்சு,
ஆண் பெற்ற
கடன் மூச்சு
தீர்க்காமலே தொடர்ந்தாச்சு..!

பெண்ணால் ஆன உலகம் இது
பெண்மை போற்றுவோம்..!
                    - இளையபாரதி

Saturday 18 March 2017

அம்மா..!

"அம்மா "

எப்படி எல்லாம்
என்னை வளர்த்தாய்  அம்மா...!!

முதல் கவிதை
நான் எழுதி
முதன் முதலாய்
உனக்கு காண்பிக்க
முத்தாக இருக்கு என்றாய்...

மூக்குசளி ஒழுகும்
உன் மகன் எனக்கு 
முந்தாணியில் நீ
துடைத்துவிட்ட....
உன் முந்தாணி  வாசம்
என் கை குட்டையில்
இல்லை அம்மா...

மிட்டாய்  வாங்க 
ரூபாய் கேட்டால்
என்னை அலைகழித்து
மசாலா பெட்டி திறந்து
நீ கொடுத்த
ஒற்றை நாணயத்தின்
வாசமே  தனி...அம்மா

மறுநாள் நாணயம்
இடம்  மாறி
"டீ" பொடி பெட்டியில்
இடம் பிடித்தது.....
அது வேறு சேதி...

என் பள்ளியில்
மாறு வேடப்போட்டி
நடக்க
பாரதியின் வேடம் போட
அப்பாவின் வேட்டி கட்டி..
அண்ணாவின் கருப்பு
கோட்டை  போட்டு விட்டாய்..
முழுமையடையாத
குட்டி பாரதியை..
உன் கண் "மை" கொண்டு 
மீசை வரைந்தல்லவா
முழுமையாக்கினாய் நீ...!!!

நடு நிசியில்
வேலை முடித்து
நான் வர
பசிக்குதம்மா  என்று
நான் சொல்ல
பசி தாங்க மாட்டான்
பிள்ளை என்று
பதறிப்போய்
மொறு மொறுன்னு
நீ சுட்ட தோசை
ஐயோ ..அம்மா...!!!

அடுத்த வீட்டு பையனோடு
அனுதினமும் நான்
சண்டை போட...
அன்பால் இது
ஆகாதுன்னு
அடுப்படி கரண்டியை
அனலில் வைத்து
அப்படியே எனக்கு
சூடு போட்டாய்...
அழுதது என்னவோ...நான்தான்
ஆனால் எரிந்தது
நீ தான்  அம்மா...!!!

நொந்துப்போன உன்னை
பார்த்தது, எனக்கு
நோய் வந்த போது அம்மா...

நோய் நொடி வந்தபோதும் 
நொடிப்   பொழுதும்
நீ உறங்கவில்லை அம்மா..!

அம்மை போட்டு
நான் கிடக்க
பத்தியம் இருந்த
பத்தினி தாயே...!

உன் மடியில்
என் தலை சாய்த்து
மஞ்சள் கரை படிந்த
உன் கைகளால்
தலை வருடிய
உன் விரல்களை
நான் தேடுறேன் அம்மா...!

ஆத்திகம் நீ பேச
நாத்திகம் நான் பேச..
குட்டி குட்டி
பட்டி மன்றங்கள்..
தீர்ப்பு வழங்கும்
நடுவரும் 
நீதானே  அம்மா... !!

நீ போடும்
அந்த
எட்டு புள்ளி கோலம்
எத்தனை நேரம்
பார்க்கலாம் அம்மா...!!!

விரல் பிடித்து
அப்பா நடக்க
விடுங்க அவனைன்னு
இடையில்  சுமந்து
நடந்த தாயே...!!!

நிலாச்சோறு
உருண்டை உருட்டி..
உருண்டை மேலே
கத்திரிக்காய் பொரியல் வைத்து
சிந்தாம சாப்பிடு
என்று நீ சொல்ல....
சாப்பாடு சிந்தவில்லை
கண்ணீர் அல்லவா
சிந்தினேன் நான்...!!

வெளி நாட்டு  
வேலைக்கு நான் செல்ல...
குடும்ப கண்கள்
அத்தனையும்
கலங்கி நிற்க...
" கலங்காதிரு மகனே "என்று
கலங்காத கண்களோடு
என்னை வழி அனுப்பி...
திரும்பி நின்று
உன் கண்ணீர் துடைத்த
உன் முந்தாணி
எனக்கு செய்தி சொன்னதம்மா...!!
உன் தலையணை
இன்னமும் எனக்கு
சொல்கிறதம்மா...!!

                                             - இளையபாரதி

Thursday 28 May 2015

புத்தனோடு ஓர் உரையாடல்..!


புத்தனோடு ஓர் உரையாடல்..!

கண்களை திற
உன்னிடம் பேசவேண்டும்..
"எதுவாயினும் சொல்
காது கேட்கும் எனக்கு"..
உன் காதுகள் செவிடென்று
நாங்கள் அறிவோம்,
குறிப்பாக நாங்கள்
தமிழர்கள் நன்கு அறிவோம்,..
“செவிடா நானா.? நான் செவிடல்ல,
எனக்கு வலது காது கேட்கும்”
இடக்காது..???
“கேட்காது”..!
சரிதான் ஈழப்போரின்போது
இலங்கையில் இடக்காதைதான் வைத்திருந்தாயோ..?
“வந்த நோக்கம் என்ன.”?
உன் நோக்கம் என்னவென்பதை
தெரிந்துகொள்ள வந்திருக்கிறேன்.,
“உலகில் அமைதி நிலவ வேண்டும்,
அதுவே என் நோக்கம்”,
எப்படி,..? காவி உடையுடுத்தி,
மண்டை மயிரை மழித்து,
சாதுவென்ற பெயரில்
திரிபவரைத் தவிர,மற்ற
மக்களை கொன்று...மயான அமைதி
நிலவ வேண்டும் அதுதானே..!!
அதுதானே உன் நோக்கம்..??
கண்களை திற, நீ குருடனா
என்பதை நான் அறியவேண்டும்,
“அகிமசையை,அமைதியை விரும்பும்
என்னிடம் நீ பேசும் விதம் சரியல்ல..”
அகிம்சையை,அமைதியை விரும்பும்
உனக்கு மனிதக் குருதி எப்படி
பிடித்துப்போனது..??
ஈழத்தில் ருசி கண்ட பூனையாகிப்போய்
பர்மா சென்றிருக்கிறாயா கௌதமா..?
நீ விரும்பியபடி அமைதிதான்
நிலவுகிறது,ஆனால் மயான அமைதி,..!
“நீ சொல்வது விளங்கவில்லை”..
கண்களை திறந்து தொலைக்க மாட்டாய்,
இடக்காதும் செவிடென்றாய்,
உன் மூக்கு சுவாசிப்பதில் ஏதும் பிரச்சனையா..??
“பர்மா” சென்று சுவாசி,
பிணங்கள் எரியும் வாடை வரும்,
இல்லையேல் உன் வலது காதை
பர்மா உள்ள திசையில் திருப்பு,
மரண ஓலங்கள் கேட்கும்..
இத்தனை பேசியும்
கடைசிவரை கண்கள் திறக்கவில்லை
அந்த “புத்தர் சிலை”.
-    இளையபாரதி





Thursday 16 April 2015

நிம்மதியாய் உறங்கி இருப்பார்கள்,


அன்று நிச்சயம் அவர்கள் 
நிம்மதியாய் உறங்கி இருப்பார்கள்,

மூச்சு முட்டியபோதும் 
மூத்திரப்பை சுமந்து
முற்போக்கு பேசிய,
கிழவனின் முகத்தில் 
சிறுநீர் கழித்த நிம்மதியில்,
அன்று நிச்சயம் அவர்கள் 
நிம்மதியாய் உறங்கி இருப்பார்கள்,

தன் முலை மறைக்க 
முடியாமல் 
வீட்டு மூலையில் 
முடங்கிக் கிடந்த
பெண்கள் வீதிக்கு வர 
செருப்பாய் தேய்ந்த 
அந்த கிழவனை 
செருப்பால் அடித்தார்கள்,
அன்று நிச்சயம் அவர்கள் 
நிம்மதியாய் உறங்கி இருப்பார்கள்,

ஆம் அவர்கள் 
அன்று   நிம்மதியாய் 
உறங்கி இருப்பார்கள் 
இன்று நிமதியாய் உறங்குகிறார்கள்,
அடிமைப் போர்வையோடு
நாளைய உறக்கம் விற்று..!!

செருப்பால் அடியுங்கள் 
எச்சில் உமிழுங்கள் 
சிறுநீர் கழியுங்கள் 
மலம் கூட கழியுங்கள்..
பாவம் உங்களுக்கு 
தெரிந்ததை அவைதான் 
செய்யுங்கள் ,

ஒன்று மட்டும் உண்மை 

மூட எண்ணங்கள் 
மூச்சற்றுப்போக 
மூத்திர சட்டி ஏந்திய
ஈரோட்டுக் கிழவன் 
ஈடு இணை இல்லாதவன்..!
தமிழ் வரலாற்றில் 
அழிக்க முடியாதவன்..!!

                                              - இளையபாரதி 


Wednesday 10 December 2014

கவிதை நாள்



தீபிழம்பின்
முதல் மூச்சு நாள்,
"கவிதை நாள்", ஆம்
தீர்கதரிசியான என் தலைவன்
பிறந்தநாள் இன்று,
விந்தில் ஜனித்து
வீணாய் போகாமல்,
தீப்பொறியில் ஜனித்து
வீரனாய் நின்றவன் நீ
என் தலைவா..!
தாயிழந்த குழந்தையானாலும்,
தமிழை தாயாய் ஏற்று,,
தரணியெங்கும் தடம் பதித்தாய்,
தமிழால் நீ பிழைக்கவில்லை
தமிழல்லவா உன்னால் பிழைத்தது,
தகுதியற்ற மனிதர்களை
தலைவன் என்று
தம்பட்டம் அடிக்கும்
தமிழ்நாட்டில், நான்
திமிராய் கூறுவேன்:என்
தலைவன் "பாரதி" என்று,
தலைகனத்தோடு சொல்வேன்
இன்று என் "தலைவன்",
பிறந்த நாள் என்று..!

                                       - இளையபாரதி 

Tuesday 9 December 2014

தீட்டாகிப்போனது...!


மயிருக்கு சமமானவனுக்கு
மணி மகுடம்,
பூங்கொத்துக் கொடுத்து வரவேற்பு,
போதும் போதும்..
மாதவிடாய் காலத்தில் 
தீட்டென கூறி
என் குல பெண்களை
ஒதுக்கி வைக்கும்
மடமை மிகுந்த
புண்ணியர்களே: இனி
நாட்டை விட்டு
ஒதுக்கி வையுங்கள்
அந்தக் கோவிலை
தீட்டாகிப்போனது
அந்த பணக்காரக் கோவில்...!
                   
                                         - இளையபாரதி

Friday 24 October 2014

இசைஞானி இளையராஜாவை சந்தித்த என் நண்பனுக்காக நான் எழுதிய கவிதை...



அந்த நாள் விடியும்போது
தெரிந்திருக்கவில்லை எனக்கு,
என் ஆத்மாவை
வெளியே எடுத்து
இசை மீட்டிய 
விரல்களை பிடிப்பேனென்று,
இது நாள் வரை
நீ ஒரு இசைஞானி என்று
கூறி ஏமாற்றப்பட்டிருக்கிறேன்
இசைஞானி அல்ல நீ,
நீ இசையின் இறைவன்,
பிறந்தது முதல் மனித
வாழ்வோடு ஒன்றிப்போன
காற்றை போல,
என்னோடு கலந்துப்போனாய் நீ,
இசை வீதியில் நடந்தால்
உன் உருவமே நிழலாக,
அதெப்படி உனக்கு சாத்தியமானது,
உயிரை உலுக்கி எடுப்பது,??
அந்த நாள் விடியும்போது
தெரிந்திருக்கவில்லை எனக்கு,
என் ஆத்மாவை
வெளியே எடுத்து
இசை மீட்டிய
விரல்களை பிடிப்பேனென்று,
இசையில் உயிர் குடித்த
நீ,
நிழற்படங்களை நிஜப்படங்களாக
எடுப்பவனென்பது இங்கு
பலர் அறிந்திருக்கவில்லை,
நான் அறிவேன்,
சங்கீதம் உனக்கு சரளம்தான்
நிழற்படங்கள் எடுப்பதும்
உனக்கு பிடித்தவைகளா..?
இதை அறிந்த நொடி முதல்
திமிராய் நடக்கிறேன் நான்,
படம் எடுத்த பொடியன்
என்னை,
"வா" என்றழைத்து
வலப்புறம் நிறுத்தி
படம் பிடிக்க சொன்னாய்..,
அப்போது
சொல்லத்தான் தோன்றியது
இனி என் உயிரோடு
"விளையாடாதீர்கள்"என்று
குழந்தையை ஈன்றெடுத்த
தாயின் மகிழ்ச்சி எனக்கு
இதையும் தாண்டி
எனக்கு என்ன வேண்டும்..?
இதையும் தாண்டி
ஒருவனை எது மகிழ்விக்கும்...?
இசை இறைவனை கண்டேன்
இனி நான் இறைவனடி
சேர்ந்தாலும் இன்பமே..
அந்த நாள் விடியும்போது
தெரிந்திருக்கவில்லை எனக்கு,
என் ஆத்மாவை
வெளியே எடுத்து
இசை மீட்டிய
விரல்களை பிடிப்பேனென்று,..
இறைவனைக் கண்ட இன்பத்தில் நான்
கவிதையாக்கம் - இளையபாரதி

Thursday 21 August 2014

கடைசி எச்சரிக்கை



நாழிகையில் 
ஆமையாய் கடக்கும் 
நாட்களுக்கும்,
உழைப்பின் வாசமின்றி 
உதிர்ந்து கொண்டிருக்கும் 
விடுமுறை வியர்வைக்கும், 
என் கடைசி எச்சரிக்கை,
விரைவாய் கடந்துபோக...!

                                  - இளையபாரதி

Wednesday 14 May 2014

மீட்கப்படாத இரவொன்று..!


மீட்கப்படாத இரவொன்று..!

காதலுக்காய் அர்ப்பணிக்க
முடிவெடுத்த பின்பு,
காமம் சற்று தலை தூக்க
காதல் முகம் மூட

அந்த இரவில்
மின்னல் வந்து போகும்
அந்த அரை நொடி
வெளிச்சத்தில் தெரிந்த
உன் அழகை,

மின்சாரம் பாய்ச்சிய
என் விரல் கொண்டு
தழுவ முற்பட்டபோது

மின்னலின் மகளாய்
காம முகம் விலக்கி,
காதல் முகம் விளக்கி,
மின்னலாகி  மறைந்தாய்...

வாழப்படாமல் இருக்கிறது
அந்த இரவு இன்னும்
வாழ்ந்தாக வேண்டும்
நாம் அந்த இரவை...
மீட்கப்படாமல் இருக்கிறது
அந்த இரவு...

மின்னல் மகளே வா
மீட்டெடுப்போம் வா
மீட்கப்படாத இரவை..!!

                                              - இளையபாரதி

Wednesday 7 May 2014

உமிழ் நிலமா.???



உமிழ் நிலமா.?

உமிழ் நிலமா.?
எம் தமிழகம்..?
உழுதுண்டு வாழ்ந்து,
ஊரார்க்கு வாரிக்கொடுத்த
உழவன் பூமி
எம் தமிழ் பூமி
உமிழ் நிலமா..?

விழி தமிழா..!
வாரிக்கொடுத்து
வாரிக்கொடுத்து நாம்
வாரி பூசிக்கொண்டது போதும்...!

வீரம் விளைந்த
தமிழ் பூமியில்
மற்றவன் மலம் கழிப்பதா..!
வட இந்திய கயவனுக்கு
கழிப்பிடமா தமிழகம்..??

அணு உலை,
மீத்தேன் எரி காற்று,
கொன்று குவிக்கப்பட்ட
ஈழ சொந்தங்கள்,
சுட்டு கொல்லப்பட்ட
தமிழ் மீனவர்கள்,
கச்சத்தீவு,
ஏழ்வர் விடுதலை,
காவிரி நீர் கனவு,
முல்லை பெரியார்,
ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர்,
இன்னும் எத்தனை எத்தனை..??

அணு உலை கழிவிற்கு
கழிப்பிடம் தமிழகம்,
எரி காற்று எடுக்க
தமிழகம்,
எச்சில் உமிழவும்
மலம் கழிக்கவும்
நாதியற்றதா தமிழகம்,??

இந்திய வரைபடத்தில்
கீழ் இருப்பதினால்
கழிப்பிடமாக்கப்பட்டதா
நம் தமிழகம்..?

நம் இல்லத்தின் மத்தியில்
நாய்களும் நரிகளும்
மலம் கழிப்பதா..??

விழித்தெழுவோம் தமிழா..!
அல்லது
நம் நடுவீட்டில்
நாமே மலம் கழித்து
மலமோடு மலமாக,
வாழ்ந்தாக வேண்டும்..!

                                      - இளையபாரதி




Monday 28 April 2014

சற்று உறங்கிக் கொள்ளுங்கள்
நாளை உங்கள் உறக்கம் திருடப்படலாம்,
விழித்துக் கொள்ளுங்கள்
நாளை நீங்கள் உறங்கி விடலாம்..!
                          - இளையபாரதி

Monday 31 March 2014

சிவப்பு பிடிக்குமென்று
அதையே உடுத்துகிறாய்,
அழுதே சாகின்றன
பச்சையும் நீலமும் மஞ்சளும்...!💖💖
                            - இளையபாரதி

Thursday 13 March 2014

உன் மார்பை மறைக்கும்
உன் புடவையின்
அந்த பகுதி மட்டும்
உன்னை போலவே
திமிராக திரிவது ஏனடி...??♥♥
                     
                               - இளையபாரதி

Friday 7 March 2014

கனவுக் கால்..!!!


கனவுக் கால்..!!!

வட்டிக்கு பணம் வாங்கி,
வாங்கி வந்தேன்
வாடகை கால் ஒன்று..!

ஊனமென்றும்,நொண்டியென்றும்
சப்பானியென்றும்,
நையாண்டி நடத்திய
வீட்டாருக்கும்,ஊராருக்கும்,
" நான் நொண்டி அல்ல" என்று
உரக்க சொல்ல,
வாங்கி வந்த
கட்டை கால் அது...!
என் கனவு கால் அது..!

ஒருகாலை எடுத்து விட்டால்
ஒப்பாரி வைப்பேன்னென்று..
ஒய்யாரமாய் காத்திருக்கும்
ஒன்றுமில்லாத கடவுளுக்கு,
ஓங்கி கண்ணத்தில் கொடுப்பதற்கு,
வாங்கிய கால் அது..!

மனிதக் கழிவை கூட
மண்டியிடாமல் கழிக்க
முடியாது என்னால்..
ஒரு கால்..
நான் இரு காலோடு இருந்தால்..?
கழிவையாவது கவலை இல்லாமல்
கழித்திருப்பேன்...
இனி கவலை இல்லை
என் கனவுக்கால் உள்ளது..!

கழிப்பொருளாக கணக்கில்
கொள்ளப்பட்ட நான்..!
மனதால் கொல்லப்பட்ட நான்..!
ஓட்டுக்காக மட்டும்
மதிக்கப்பட்ட நான்...!
இந்த நாகரீக
சமூகத்தால்...
பல பெயர்களில்
அழைக்கப்பட்ட நான்..!

இன்று நாகரீக
பெயர் கொண்டு
அழைக்கபடுகிறேன்..
என் பெயர்
" மாற்று திறனாளி "..!
மாற்று திறனாளியா நான்..??
அல்ல
நானே " திறனாளி "..!

ஒற்றை காலில்
எவ்வளவு தூரம்
கடக்க  முடியும் உங்களால்..??
என்னால் என் வாழ்கையை
கடக்க முடியும்...!!♥

நான் "திறனாளி"..♥
நீங்கள்..????

                                    - இளையபாரதி

Thursday 6 March 2014

விலைமகள்..!!!



விலைமகள்

வேறு வழி இல்லை
வெறுத்து போன வாழ்க்கையில்,

தினமும் வெந்து சாகிறேன்
என் சமயலறையில் அல்ல
என் மெத்தை அறையில்..!

கணவனுக்காய் கனவு கண்டுவைத்த
அதே மலர் மெத்தையில்
மலடாகிக்கொண்டிருக்கிறது
என் உடலும் உள்ளமும்...!

மானம் காத்து சம்பாதித்த
சிலநூறு ரூபாயில்...
நிறைந்தது என் ஒரு வயிறு மட்டுமே...

குடும்ப வயிறை நிறைக்க
குறுக்கு வழியே  சிறந்ததென்று..
தோளில் தோல் பை மாட்டி...
தோள்களை பின்னிழுத்து..
மார்பை முன்னிறுத்தி..
மானம்கெட்டு நான் நடந்த
அந்த நாளில்...
நான் செத்து போனேன்
என் குடும்பம் வாழ..!

சிறகடித்து பறக்க எண்ணியவள்
சிப்பிக்குள் முத்தாய்,
பொத்தி வைத்த
என் தேகத்தை விற்க துவங்கினேன்..
வற்றாத என் தேகம்
இன்று வரிப்புலியாக..!

வியப்பானதுதான் நம் நாடு
மானம் காத்தால் சிலநூறு
மானம் விற்றால் பல ஆயிரம்..!

மார்பை மறைத்த..
என் முந்தானியில்
விந்துக்கறை இருந்தாலும்..
என்ன இது என்று கேட்க்கும்
துணிவில்லை என் அம்மாவிற்கு..!

மகளின் மானம் போனால் என்ன..?
மது இருந்தால் போதும்
என் தந்தைக்கு..!


ஒவ்வொரு மாதமும்
அந்த மூன்று நாள் மட்டுமே
விடுமுறை எனக்கு...

என்னை போன்ற
பிறவிகளுக்காகதான் பாவம் பார்த்து
கடவுள் கொடுத்திருக்கிறான்
இந்த மூன்று நாட்களை..
எங்கள் பிறப்புறுப்பு  ஓய்வெடுக்க...!


மனம் திறந்து பேசினாலும்
மார்பை பார்க்கும்  இந்த
மன்மதன்கள்...
மனைவியில் இல்லாத
எதை கண்டுவிட்டார்கள்..என்னிடம்..??

என் தொடை இடுக்கில்
தொலைந்துபோன எந்த
ஆண்மகனுக்கும்
தெரியவில்லை...
மனைவியை தவிர்த்து
வேறு மெத்தை
ஏறுபவன்..
" ஆண் " அல்ல என்பது..!!!

                                        - இளையபாரதி