கனவுக் கால்..!!!
வட்டிக்கு பணம் வாங்கி,
வாங்கி வந்தேன்
வாடகை கால் ஒன்று..!
ஊனமென்றும்,நொண்டியென்றும்
சப்பானியென்றும்,
நையாண்டி நடத்திய
வீட்டாருக்கும்,ஊராருக்கும்,
" நான் நொண்டி அல்ல" என்று
உரக்க சொல்ல,
வாங்கி வந்த
கட்டை கால் அது...!
என் கனவு கால் அது..!
ஒருகாலை எடுத்து விட்டால்
ஒப்பாரி வைப்பேன்னென்று..
ஒய்யாரமாய் காத்திருக்கும்
ஒன்றுமில்லாத கடவுளுக்கு,
ஓங்கி கண்ணத்தில் கொடுப்பதற்கு,
வாங்கிய கால் அது..!
மனிதக் கழிவை கூட
மண்டியிடாமல் கழிக்க
முடியாது என்னால்..
ஒரு கால்..
நான் இரு காலோடு இருந்தால்..?
கழிவையாவது கவலை இல்லாமல்
கழித்திருப்பேன்...
இனி கவலை இல்லை
என் கனவுக்கால் உள்ளது..!
கழிப்பொருளாக கணக்கில்
கொள்ளப்பட்ட நான்..!
மனதால் கொல்லப்பட்ட நான்..!
ஓட்டுக்காக மட்டும்
மதிக்கப்பட்ட நான்...!
இந்த நாகரீக
சமூகத்தால்...
பல பெயர்களில்
அழைக்கப்பட்ட நான்..!
இன்று நாகரீக
பெயர் கொண்டு
அழைக்கபடுகிறேன்..
என் பெயர்
" மாற்று திறனாளி "..!
மாற்று திறனாளியா நான்..??
அல்ல
நானே " திறனாளி "..!
ஒற்றை காலில்
எவ்வளவு தூரம்
கடக்க முடியும் உங்களால்..??
என்னால் என் வாழ்கையை
கடக்க முடியும்...!!♥
நான் "திறனாளி"..♥
நீங்கள்..????
- இளையபாரதி
No comments:
Post a Comment