Monday 2 April 2012

முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!!




முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!!

தவமிருந்துதான் பெற்றோம்
உன்னை,
தடுமாறி வாழ்கை நடத்தியபோதும்
தனித்தன்மையாய் வளர்த்தோம்,

உன் எச்சில் பட்ட
என் கண்ணங்கள்
இன்னும் குளிருதாடா..!மகனே...

உன் மழலை புன்னகையை
பிச்சை கேட்டு
பல நாட்கள் உன்னிடம்
மண்டியிட்டிருக்கிறேன் ,
என் செல்ல மகனே...,

உன் பால் வாசத்தில்
என் பாசம் உணர்ந்தேன்,

நீ கடித்து காயபடுத்திய
என் கன்னத்து தழும்பை
இன்னமும் முத்தமிடுகிறாள்
உன் அம்மா...!

என் கிழிந்த வேட்டியை
மறைத்து,மடித்து கட்டி
வேட்டி வாங்கும்
பணத்தில் வாங்கியதுதான்
உன் வெள்ளி பாலாடை...!
என் அன்பு மகனே..!

முதல் முறை
நீ பள்ளி செல்லும்போது
உன்னை மருத்துவனாகதான்
பார்த்தேன் இந்த பாவி..,

கல்லூரி செல்லும்போது
கர்வத்தோடு பார்த்தேன்...,

மணக்கோலத்தில் உன்னை
பார்த்தபோதுதான்,
உயிருடன் மோட்சமான
முதல் மனிதனானேன்..,

என் கடமை முடிந்தது
என் அன்பு மகனே...!

ஓர் இரவு,
வீட்டில் படுத்துவிட்டு
விழித்து பார்த்தால்,
நானும் உன் தாயும்
கிடந்தது
"முதியோர் இல்ல" வாசலில்...,

பேர பிள்ளைகள்
உதைக்க காத்திருந்த
மார்பில்,
நீ உதைத்ததெப்படி..?
என் செல்ல மகனே..!
என் மகன் இப்படி ஆனதெப்படி..?

உன் தாய்
கொடுத்த பால்
விஷமானதெப்படி..?

என் மேல் சிந்திய
உன் எச்சில்
அமிலம் ஆனதெப்படி..?

போதும் மகனே போதும்..!

உயிரை கொல்பவன் மட்டும்
கொலைகாரன் அல்ல...
உணர்வை கொல்பவனும்தான்..,

நீ கொலைகாரன் ஆனதெப்படி...?

நீ செய்ததை
என் உடல் தாங்கும்...
என் உள்ளம் தாங்காது..

நான் தாங்குவேன்
உன் தாய்
தாங்கமாட்டாள்...!
பாலூட்டியவளாயிற்றே...!!!

மகனே..!
வாரம் ஒருமுறை
என் பேரப்பிள்ளைகளை
கூட்டி வா..,
இவர்கள்தான் "தாத்தா பாட்டி"என்று
அறிமுகம் செய்,

"தாத்தா பாட்டி சாமிகிட்ட போய்டாங்க",
என்று கூறி எங்களை
உயிரோடு எரிக்காதே...!

எங்கள் நிலை பார்த்து
உன் பிள்ளைகள்
வளர்ந்தால்தான்,
நீ எங்கள் நிலைக்கு
வராமல் இருப்பாய்..!!!

நீ மிகவும் நல்லவன்
என் செல்ல மகனே..!!!
அனாதையாக எங்களை
விட்டுவிடாமல்,
முதியோர் இல்லத்தில்...
சேர்த்தாயே...!!!

நன்றி மகனே

என் மகன் நல்லவன்...!!!


                                      - இளையபாரதி


No comments:

Post a Comment